Skip to main content

பழந்தமிழரின் வாழ்க்கை முறை:

 


பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள்:


இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி. இம்மொழியின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு இம்மொழியில் அமைந்துள்ள பொருள் இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்திற்குச் சான்றாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும்.


சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவ்வியற்கையைத் தாங்கள் படைத்த இலக்கியங்களிலும் பதிவு செய்து வந்துள்ளனர். ஆதலால்தான் இன்றளவிலும் சங்க இலக்கியங்கள் உயிரோட்டமாக விளங்கி வருகின்றன. இயற்கையோடு ஒன்றாத வாழ்க்கை அழகற்றது, உணர்வற்றது என்ற உண்மையை உணர்த்துவனாக உள்ளன.


இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. இது வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. மொழியை ஊடகமாகக் கொண்டு விளங்குகிறது. இலக்கியம் மனிதனை, மனிதநேயப் பண்புகளுடன் வாழ வழிவகை செய்கின்றது. மனித வாழ்க்கையை அழகாகச் சொல்லும் போது இலக்கியம் பிறக்கின்றது.


பண்டைத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான இடத்தினைத் தேர்வு செய்து அதனைத் தம் வாழிடமாக அமைத்துக் கொண்டனர். அவ்வாறு அமைந்த வாழிடங்கள் மலை, காடு, வயல், கடற்கரைப் பரப்பு என அவர்களின் உடல் உணர்விற்கு ஏற்றார் போல் அமைத்துக் கொண்டனர் என்பதை,


“மண்திணிந்த நிலனும்

நிலன்ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”


இன்றைய மனிதர்களைப் போல் இயற்கையை அளிக்காமல் இயற்கையைப் பேணிக் காத்து வந்தனர். தங்களின் வாழ்க்கைக்கு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் அடிப்படையாக விளங்குவன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இதனை உணர்த்துவனவாக மேற்கண்ட பாடல் வரிகள் அமைந்துள்ளன.


சங்ககால மக்கள் தொழில்நுட்பத்துடனும் அழகியல் உணர்வுடனும், நிலத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்திருந்தனர். அத்தகைய எளிய மக்களின் உணவு, உடை, கல்வி, ஈகை, நம்பிக்கை, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை ஆய்வதாக உள்ளது.





அதிகாலையில் எழுதல்


சங்க கால எளிய மக்கள் உழைக்கும் வர்க்கத்தினைச் சார்ந்தவர்கள் இவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன் விழித்தெழுந்தனர். துயில் எழுவதற்கு சேவலின் கூவலும், பிற பறவைகளின் ஒலியும் துணை செய்தன. இவை மட்டும் அல்லாமல் அந்தணர்கள் ஓதும் மந்திர துதியும், இசைக்கலைஞர்கள் எழுப்பும் இசை ஒலியும் அரண்மனையில் ஒலிக்கும் முரசும் மக்களை விழித்தெழச் செய்தன.


“நான் மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம இன்துயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம்பர் ஊர் துயிலே”


பொய்கையில் இசைபாடும் வண்டுகளைப் போல், அந்தணர்கள் வேதம் பாடத் தொடங்குகின்றனர். கோழியும் மற்றப் பறவைகளும் எழுப்பும் ஓசையைக் கேட்டு மக்கள் எழுகின்றனர். மதுரை நகரில் அந்தணர்களின் வேத ஒலியில் மக்கள் அதிகாலையில் துயில் எழுந்தனர் என்பதைப் பரிபாடலும், மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.


தை நீராடுதல்


திருமணமாகாத இளம் கன்னிப் பெண்கள் மார்கழி மாதம் முழு நிலா நாள் தொடங்கி தை மாதம் முழு நிலா நாள் வரை நீராடி நோன்பு இருப்பர். இதனை ‘தை நீராடல்’ என்று அழைப்பர். இவ்வாறு நோன்பு இருக்கும் கன்னிப் பெண்கள் மரத்தால் ஆன பாவையை வைத்து வழிபடுவார்கள். இதன் பயனாக அவர்கள் விரும்பியவர்கள் கணவனாகக் கிடைக்கப் பெறுவார்கள் என்பது சங்க கால மகளிரின் நம்பிக்கை. இதனை,


“உண்டியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவர் எங்கணவர் ஆவார்”


என்ற திருவெம்பாவை பாடலும்,


“தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ”


என்ற கலித்தொகை பாடல் வரியும் குறிப்பிடுவதைக் காணலாம்.





உணவு முறைகள்


சங்க கால மக்களின் பண்பாடுகளில், உணவுப் பொருட்கள், அவர்கள் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கியப் பங்கு பெறுகின்றன. அவர்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும் பருவகால மாற்றத்திற்கு ஏற்றவாறும், அவர்கள் செய்யும் உற்பத்தி முறைகளுக்கு ஏற்றவாறும் உணவு அமைகின்றது.


சங்க இலக்கியம் உணவு என்பது ‘நிலத்தொடு நீரே’ என்று குறிப்பிடுகிறது. பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைக்கப் பெற்ற தாவரங்களையும், உயிரினங்களையும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தினர். அவர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மா, பலா, வாழை போன்ற பழ வகைகளும், அவரை, துவரை, தினை, வரகு, சாமை போன்ற சிறு தானிய பயறு வகைகளும், உணவுப் பொருட்களாக விளங்கின. இதன் காரணமாக அக்கால மக்கள் கட்டான உடல் அழகுடன், நோயற்ற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.


குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தேன், கிழங்கு, பன்றியின் இறைச்சி போன்ற உணவுகளை ஓலையால் செய்யப்பட்ட வட்டிலில் இட்டு உட்கொண்டுள்ளனர்.


“கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்

மான் தசை சொரிந்த வட்டியும்”


என்ற புறப்பாடலின் வழி இதனை அறியலாம்.


மேலும், மலைப் பகுதியில் வாழ்ந்த குறவர்கள் உடும்பு, மான், பன்றி ஆகியவற்றின் இறைச்சியையும் உணவாக உட்கொண்டனர். தேன், கள்ளுடன் பலாக்கொட்டையின் மாவும் அவற்றில் பாலும் சேர்த்து மூங்கில் குழாய்களில் இட்டு முதிர வைத்து உண்டனர் என்றும், இவர்கள் இறைச்சியின் பொரியலையும், சிறிய தினைச் சோற்றையும் உணவாக உண்டனர் என்றும் மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. இதனை,


“கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்”


என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம். மேலும்,


“இருந்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு

கவைத் தாள் அலவின் கவலையொடு பெறுவிர்”


என்று சிறுபாணாற்றுப்படையும் குறிப்பிடுகின்றது.





ஆடைகள்


மனிதச் சமுதாயத்திற்கு ஆடை மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது. ஏனென்றால், மனிதனின் மானத்தை மறைக்கும் கருவி ஆடை. இதனை, ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி மூலம் அறியலாம். ஆடைகள் மனிதனின் பண்பையும், அவன் பெற்றுள்ள பொருளாதாரச் சிறப்பினையும் பிரதிபலிப்பனவாக உள்ளன. சங்க காலத்தில் ஆடையை “உடை, தழை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, போர்வை, காழகம், கச்சம், கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், புங்கரை நிலம், உத்தரீயம், கம்பலம், கவசம், தூசு, மடிவை, சிதர்வை, சிதவல், வார், மெய்ப்பை, மெய்ம்மறை, பட்டகம், நூல், பக்குடுக்கை” எனப் பலவாறு அழைத்துள்ளனர்.


கல்வி


உலக உயிரினங்களில் தலைச்சிறந்த இனம் மனித இனம். ஏனென்றால் நல்லது, கெட்டது என்று வகை பிரித்துப் பார்க்கும் பகுத்தறியும் குணம் படைத்தவன் மனிதன். மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கு முதன்மையானதும், அடிப்படையானதும் கல்வி, விலங்கு நிலையில் இருக்கும் மனிதனைப் பகுத்தறியும் தன்மைக்குப் பக்குவப்படுத்துவது கல்வி. கல்வியானது கற்பவரின் சிந்தனையைத் தூண்ட வேண்டும். தன்னம்பிக்கை, ஆளுமை, சேவை, மனிதநேயம் போன்றவற்றைத் தர வேண்டும். அத்தகைய கல்வியை மனித இனம் கசடற கற்க வேண்டும். ஆதலால் தான் வள்ளுவர்,


“கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக”


என்று கல்வியின் பெருமையை உலகிற்குப் பறைசாட்டுகிறார்.


சங்க காலத்தில் அரசு, பள்ளிகளை நடத்தியதாகச் சான்றுகள் காணப்படவில்லை. இன்றைய தனியார் பள்ளிகள் போல், ஆசிரியர்களே நடத்திய திண்ணைப் பள்ளிகள் தான் செயல் பெற்று வந்துள்ளன. மரத்தடியும், ஆசிரியர் வீடும், ஊர்ப் பொது இடமும் பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. அன்றைய காலத்தில் “நக்கீரனின் தந்தை மதுரை கணக்காயர் பெரிய ஆசிரியராக விளங்கி இருக்க வேண்டும். மேலும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை பாலாசிரியர், சேந்தங்கொற்றனார், நப்பாலானர், கிடங்கில் குலபதி, நக்கண்ணார் என்பவர்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.


கல்வியானது ஒரு கால எல்லைக்குள் அடங்குவது அன்று. அது எல்லையற்ற பரப்புடையது. கல்வியை ஒருவன் வாழ்நாள் முழுவதும் கற்காலம். அது சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவியாகச் செயல்படவல்லது. அது அறிவுக்கடலைத் திறக்கும் சாவி, ஆதலால் தான் ஆரியப் படை கடந்த பாண்டிய நெருஞ்செழியன்.


“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”


என்று அத்தகைய கல்வியைப் பிச்சை எடுத்தாவது கற்றல் வேண்டும் என்று குறிப்பிடுகிறான்.




கலை


பண்டைத் தமிழர்களிடையே கல்வியறிவுடன் கலை உணர்வும் கலந்திருந்தது. தங்கள் மனதில் தோன்றிய கற்பனை வளத்தினைக் கலையாக வெளிப்படுத்தினர். கலை என்னும் சொல் ‘கல்’ என்னும் ஏவல் பகுதியில் இருந்து வந்ததாகும். கல்வி என்ற சொல்லிற்கு இதுவே முதனிலையாகும்.


கலைகளில் கவின் கலை, நுண் கலை, நற்கலை, அழகுக் கலை எனப் பலப் பெயர்கள் உண்டு. மேலும், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் போன்றவை தமிழரின் அழகுக் கலையில் முக்கியப் பங்கு பெறுவன ஆகும். பண்டைத் தமிழர்கள் ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகின்றனர். இதனை,


“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்”


என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.


தமிழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை கோவில், அரண்மனை, மதில், வீடுகள் ஆகியவற்றின் வழியே அறியலாம்.


விருந்தோம்பல்


பண்டைத் தமிழரிடம் விருந்தோம்பல் பண்பாடு சிறப்பாக அமையப் பெற்றிருந்தது. இப்பண்பாடு தமிழரின் இல்லற வாழ்க்கையை அளக்க உதவும் அளவு கோலாகவும் விளங்குகின்றது. தாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அதனை, தம்மை நாடி வந்த விருந்தினர்களுக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்ந்தனர். தெரிந்த உறவினர்கள் மட்டும் அன்றி முன்பின் தெரியாத அயலவர்களுக்கும் உணவிட்டு அகம் மகிழ்ந்திருந்தனர்.


விருந்தோம்பல் பண்பு இல்லற மகளிரின் இன்றியமையாப் பண்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. பெண்ணிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியர் விருந்தோம்பல் பண்பாட்டையும் சேர்த்து ‘விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்’ என்று குறிப்பிடுகிறார்.


தங்களின் இல்லத்திற்கு விருந்தினர் தினந்தோறும் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று விருந்தை எதிர்நோக்கும் தமிழ் மக்கள் அன்று இருந்தனர். இரவு பகல் என்று பாராமல் எப்பொழுதும் விருந்தினர் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.


“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல்இயற் குறுமகள்”


தங்கள் வீட்டில் உணவுப் பொருள்கள் குறைவாக இருந்தாலும், அவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் வரும் விருந்தினர்களின் மனம் கோணாமல் விருந்து படைக்கும் இயல்பினராய் தமிழர்கள் விளங்கினர் என்பதை,


“... ... ... ... ... உள்ளது

தவச் சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்

நீள் நெடும் பந்தர் ஊன்முறை ஊட்டும்

இற்பொலி மகடூஉப் போல”


என்ற புறப்பாடல் வழி அறியலாம்.


அதியமானின் விருந்தோம்பல் பண்பினை ஔவை குறிப்பிடும் போது, அவனைத் தேடி வருவோர்கள் ஒரு நாள் சென்றாலும், அதற்கு அடுத்த நாள் சென்றாலும், அவருடன் பலரை அழைத்துக் கொண்டு சென்றாலும் முதல் நாள் எத்தகைய முகமலர்ச்சியுடன் வரவேற்றானோ, அதே முகமலர்ச்சியோடு எல்லா நாளிலும் வரவேற்று உபசரிப்பான் என்று குறிப்பிடுகிறார். இதனை,


“ஒரு நாள் செல்லாம் இரு நாள் செல்லலாம்

பல நாள் பயின்று பலரொடு செல்லினும்

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ”


என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.


ஈகை


ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பு.


“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்போம் எனினே துப்புந பலவே”


பிறர்க்குக் கொடுத்து தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கை. ஈகை குணம் தனி மனிதச் சிந்தனையில் தோன்றி சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்தாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றுகின்றனர்.


வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்று வந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தார்க்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் பண்பு. இதனை,


“இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதிமனை கிழவோயே”


என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம். பாரி என்னும் ஒப்பற்ற வள்ளல். இவ்வுலகில் மாரிக்கு இணையாக ஈகை குணம் கொண்டவன் என்று புறம் குறிப்பிடுகின்றது. இதனை,


“... ... ... ... ... அறம் பூண்டு

பாரியும், பரிசிலர் இரப்பின்

வாரேன் என்னான் அவர் வரையன்னே”


“பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே”


என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம்.




நட்பு


நட்பு என்பது ஒருவர்க்கு ஒருவர் உள்ளம் நெருங்கி எவ்விதக் கைமாறும் கருதாது பாசமுடன் பழகி வாழ்வது. இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் யாவும் தனித்து வாழ்வது இல்லை. ஒன்றுடன் ஒன்று ஏதோ ஒரு வகையில் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.


நட்பிற்கு எளிதில் திருக்குறளைக் காட்டிலும் பிறவற்றை உதாரணமாகக் கூற முடியாது. தன் உடை நெகிலும் போது அப்பொழுதே தன் கை சென்று உதவி செய்வது போல, நண்பனுக்குத் துன்பம் நேரும் போது உற்ற நண்பன் உடன் சென்று, அவனின் துன்பத்தினை நீக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”


வள்ளுவரின் இக்கருத்தினையே பெருங்கதையும் வழி மொழிகிறது.


“உடையழி காலை உதவிய கைபோல

நடலை தீர்த்தல் நண்பனது இயல்பு”


நட்பு என்பது உள்ளத்தைத் திறந்து காட்டுவதாக இருக்க வேண்டும். இது தான் உலகிலேயே உன்னதமான நட்பு. ஒருவன் தன்னுடைய உள்ளத்தைத் தன் நண்பனுக்குத் திறந்து காட்டும்போது நட்பு மேலும் இரட்டிப்பாகிறது. இதற்கு முன்னுதாரணமாக விளங்குபவன் அனுமன். இன்றும் பேச்சு வழக்கில், “நான் அனுமன் அல்ல, என் உள்ளத்தைத் திறந்து காட்ட” என்று குறிப்பிடுவதைக் காணலாம். இதனை,


“எந்தை! வாழி ஆதனுங்க! என்

நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே”


என்று ஆத்திரையனார் என்னும் புலவர் கூற்றாகப் புறம் சுட்டுகிறது.


காதல்


உலக இயக்கத்திற்கு அடிப்படையானது காதல். இரண்டு உள்ளங்கள் இணைவது காதல். இரு உயிர்களிடையே ஏற்படும் அன்புணர்வு காதல் என்றாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் அன்புணர்வே காதல் என்று இன்று பொதுவாக அழைக்கப்படுகிறது.


காதல் கண்களில் அரும்பி இதயத்தில் மலரும் பூவாக விளங்குகிறது. இதனைத் தொல்காப்பியர்,


“நாட்டம் இரண்டும் அறிவு உடம் படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”


என்று குறிப்பிடுகிறார்.


கண்களின் வழியே மலர்ந்த காதல் பூ உடலில் புகுந்து மனம் வீசும் தன்மை கொண்டது. காதலில் வயப்பட்ட தலைவி தன் தலைவனோடு தான் கொண்ட காதலைக் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறாள்.


“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவுவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”


இங்கு தலைவி தன் காதலின் அகலத்தையும், உயரத்தையும், ஆழத்தையும் குறிப்பிடுகின்றாள்.


திருமணம்


இருமனங்கள் இணைவதைத் திருமணம் என்று குறிப்பிடுகின்றனர். மனித வாழ்க்கையில் இது ஒரு இன்றியமையாத நிகழ்வாகும். தனி மனிதனைச் சமுதாயத்தின் உறுப்பினராக அங்கீகரிக்கும் தகுதியாக விளங்குகிறது. ஆதலால் தான் திருமண உறவு முறை முக்கியத்துவம் பெறுகிறது. களவில் இணைந்த தலைமக்கள் இடையே கருத்து வேறுபாடு தோன்றியப்பின் கரணம் தோன்றியது என்று திருமணத் தோற்றம் குறித்து தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,


“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”


என்ற நூற்பா மூலம் அறியலாம்.


களவினைக் கைக்கொண்ட காதலர்கள் ஊரில் தொடர்ந்து இருப்பினும் அல்லது உடன் போக்கில் ஊரை விட்டுச் சென்றாலும் ‘திருமணம்’ என்ற நிலைக்கு உட்பட்டு கணவன் மனைவி எனப் பலர் போற்ற வாழ்ந்தனர். திருமணம் பெற்றோர்களால் நிச்சயித்தும் அல்லது தலைமக்கள் தாமே எதிர்பட்டும் செய்து கொண்டனர். இந்நிகழ்வு இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.




போர்


சங்க காலத் தமிழகம் மூன்று பேரரசர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது. இவர்களிடையே ஓயாது போர்கள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். மண்ணாசை, புகழ், போரில் இறப்பவர்கள் வீர சுவர்க்கம் பெறுவர் என்ற நம்பிக்கை, பேரரசனாக நாட்டை ஆள வேண்டும் என்ற பேராசை. பெண் மீது இருக்கும் மோகம் எனப் பலக் காரணங்களைக் கூறலாம்.


வாழ்க்கையில் நிகழும் பிற நிகழ்வுகளைப் போலப் போரையும், ஒரு சமய நிலைக்கு உயர்த்தி அதற்குக் கொற்றவை என்றொரு தெய்வத்தினை உருவாக்கி சங்கத் தமிழர்கள் வணங்கினர். போர்தான் அனைத்திற்கும் முதன்மையானது என்று நினைத்திருந்தனர் என்பதால் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்று வருதலும், புண்ணொடு வருதலும் மகிழ்ச்சியாகக் கருதினர் என்பதைப் புறப்பொருள் மூலம் அறியலாம். இதனை,


“மண்ணோடு புகழ் நிறீஇப்

புண்ணொடு தான் வந்தன்று”


என்ற புண்ணொடு வருதல் துறை விளக்குகிறது.


இவ்வாறு போரிலும் ஒரு வகையான அறத்தைக் கடைபிடித்தனர் பழந்தமிழர்கள்.


விழாக்கள்


மக்களின் வாழ்க்கையில் சோர்வினைப் போக்கி இன்பமும், மலர்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுத்துவதாக விழாக்கள் அமைவன. இவற்றின் நோக்கம் மக்களை ஒன்றுபடுத்தித் துன்பத்தை மறக்கச் செய்து அவர்களிடையே இன்பத்தினை ஏற்படுத்துவதாகும்.


விழாக்கள் அக்கால மக்களின் கலாச்சாரப் பண்பாட்டினை எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.


அவற்றுள் சில சமயத் தொடற்பானவை சில சமூகத் தொடர்புடையவை. நகரங்கள் ‘விழவு’ மேம்பட்ட பழவிறல் மூதூர் என்று பாராட்டப் பெற்றுள்ளன. பாணர், கூத்தர் முதலியக் கலைஞர்கள் விழாக்களில் ஆடியும், பாடியும் மக்களை மகிழ்வித்துள்ளனர்.


பண்டைய இலக்கியங்கள் விழாவினை ‘விழவு’, ‘விழா’, ‘சாறு’ என்ற சொற்களால் குறிப்பிடுகின்றன. இதனை,


“அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்

பழிஇலர் ஆயினும் பலர்புறங் கூறும்”


என்ற அகநானூறு பாடல் வழியே அறியலாம்.


மேற்கண்டவாறு பண்டைய காலத்தமிழர்களின் வாழ்வியல் முறைகள் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.


*****




Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...